Wednesday, November 20, 2013

இந்திய வீட்டுத்திட்ட வீடுகளை வழங்கக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


-நவரத்தினம் கபில்நாத்

இந்திய வீட்டுத்திட்டத்தால் வழங்கப்பட்ட வீடுகளை தங்களுக்கு வழங்குமாறு கோரி கந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்களே இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தாதியர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த கந்தன்குளம் கிராம மக்கள் அங்கிருந்து வவுனியா மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து  மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

'தமது வீடுகளை தமக்கு வழங்கு', 'அரச அதிகாரிகளே ஏன் அநீதியாகச் செயற்படுகின்றீர்கள்', 'ரிசாட் அமைச்சரே நீதியற்ற உமது செயலை உடன் நிறுத்தும்', 'மழையாலும் கண்ணீராலும் நாம் நனைகின்றோம்' ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட  பதாகைகளையும் தாங்கியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,

'கந்தன்குளம் கிராமத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் முன்னர் நாங்கள்  மீள்குடியேறியுள்ளோம். இந்த நிலையில், இந்தக்  கிராமத்திற்கு இந்திய வீட்டுத்திட்டத்தால் வழங்கப்பட்ட வீடுகள்  அரசியல்வாதிகள் சிலரால்; தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் நாங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.

சுமார் 76 குடும்பங்கள் வசிக்கும் கந்தன்குளம் கிராமத்தில் தற்காலிகமாக எங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளமையால்,   மழைக் காலங்களில் நாங்கள்; பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.

எனவே, எங்களின் கிராமத்திற்கு  வழங்கப்பட்ட வீடுகளை உடனே வழங்கி எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துக்கொள்ளுங்கள்' என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment