Monday, November 18, 2013

உண்மை தெரியாமல் பேசுகிறார் டேவிட் கெமரூன்! - சனல் 4க்கு முரளிதரன் பேட்டி.

இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
 
யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவில்லை. 

அதுமட்டுமல்ல இலங்கைக்கு கூட இதற்கு முன்னர் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதமரியிடம் அழுது புலம்பியதால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
பிரிட்டிஷ் பிரதமர் தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம்.கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் தவறான விசாரணைகளை நடத்தி இல்லாத குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு எத்தனிக்கிறார். நான் அப்படியான கொள்கைகளை என்றுமே கடைப்பிடிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியானால் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டீர்களா என்று சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த அவர், எனக்கும் என்னுடைய கடந்த காலம் ஞாபகம் இருக்கிறது. நானும் ஒரு தமிழன். 1977ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது எனது குடும்பமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எங்களிடம் இருந்த அனைத்துமே அழிந்து போயின. அப்படியான துன்பங்களை அனுபவித்தாலும் நான் எனது கடந்த காலத்தை பற்றி நினைத்து துன்பப்படுவதே இல்லை.

கடந்தகாலத்தைப் பற்றி மறந்து கடந்தகால துன்பங்களை இழைத்தவர்களுக்கு மன்னிப்பளித்து நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதே எனது நோக்கமாகும். இது பற்றி இயேசுநாதரும் ஒரு தடவை கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டார் முத்தையா முரளிதரன்.

No comments:

Post a Comment